அட ‘அஞ்சாவது பெயிலானவனே’ – ரா.ராஜசேகர்

ஐயா (எ) 95 வயது குழந்தை…
தம்பி வடிவரசு (எழுதிய) குழந்தை.
வானூர்தியை வானத்தில் போகும் எறும்பென்று வர்ணிப்பது
உழைப்பை பேராயுதம் என்பது
தன் சாவை தான் பார்க்கவியலா விசித்திரமாக்கி சாவை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கும் தாராள குணம் பேசுவது
ஆமா…உன் கல்யாணத்துக்கு என்னயக் கூப்பிடுவியா? என பெற்ற மகனிடமே கேட்பது
குடும்பப் பகை குறுக்கே நின்றாலும் மேயாத ஆடுகளை மேய வைக்கும் வைத்தியம் சொன்னது
ஆதண்டங்காய் வத்தலின் சுவையை அறியத் தந்தது
புளியங்கொட்டை,பலாக்கொட்டை அவித்து தின்ற அந்தப் பழைய வறுமை
நம்மள மாதிரி தூக்கிவிடவும் வழிகாட்டவும் ஆளில்லாதவங்களுக்கு கஷ்டமாதான தொண என்று நயத்தகு நாகரிகத்தில் வலியுரைப்பது
சிவாஜி எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக ஆடியது பாடியதென
தன் வாழ்வை ஆழமாகவும் அர்த்தமாகவும் அமர்க்களப்படுத்தி வாழும் மனிதரை மன்னிக்கவும் குழந்தையைப் பற்றியதெனில் மேலோட்டமாகப் பார்த்தால் மிகை.மிக நெருங்கி நேசித்துப் பார்த்தாம் மிரட்டல்.மென்மை.மேன்மை.
தகப்பனிலக்கியமாகத் தந்திருக்கிறான் தம்பி வடிவரசு இதை.
காட்டுவள்ளிக் கிழங்கு தோண்டுவதாகட்டும்
ஆடுகள் விற்று டி.வி.வாங்கியதாகட்டும்
தன் ஊரின் ஒடுக்கப்பட்டோருக்காக உறுபொருளான தன் நிலத்தையே தானமாகத் தந்ததாகட்டும்
சாராயம் தொடாத சத்தியமாகட்டும்
வடிவரசுவின் ஐயா வாழ்வரசியலின் வழிகாட்டி.
கிரிக்கெட் பேட் செய்து கொடுத்தது முதல்
ரைட்டிங் டேபிள் செய்து கொடுத்தவர் வரை நீ சொல்லிச்செல்லும் அழகு செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம…அதுவே பெரும் ‘பேட்(bat) டச்’தான்…
பந்து பறக்கிறது சிக்சரை நோக்கி.
ஊருக்குள் காட்டுக்குள் மலைக்குள் விவசாயம் பார்க்க…விறகு வெட்ட…கிழங்கெடுக்க…என எங்கெங்கோ ஐயாவின் கைப்பிடித்து அப்படியே உன்னோடு நானும் ஒருநடைபோய் வந்தேன்.
என்ன சொல்ல உனக்கு?…
அட ‘அஞ்சாவது பெயிலானவனே’…
அசத்தல்டா அபாரம்டா…
நீ சாதிக்க விரும்பும்
பாட்டுலகம்போல படைப்புலகமும் உனக்கு வெற்றிகளையும் அள்ளித்தரட்டும்…
வாழ்த்துகள் டா தம்பி…
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை