சொல்லன்றி எதுவுமற்றவன்! – 327
இதுவரையான தமிழக வரலாற்றில் நீங்கள் எண்ணி பெருமிதம் கொள்ளும் சம்பவமாக எதைச் சொல்வீர்கள், ஏன்?
திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை என்னும் ஊரில் இருக்கும் மிகப் பழமையான செந்தாமரைக் கண்ணன் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று மகத்துவம் வாய்ந்த ஒரு செய்தியைக் கூறுகிறது.
சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்பதாவது பாடலான பட்டினப்பாலையை இயற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவனுக்கு, அதன் பாட்டுடைத் தலைவனான சோழ மன்னன் திருமாவளவன் என்னும் கரிகாற் பெருவளத்தான், பதினாறு நூறாயிரம் பொற்காசுகளை அளித்ததோடு, பதினாறு கால் தூண் கொண்ட மண்டபம் ஒன்றையும் பரிசாக வழங்கினான்.
அதனைக் கேள்வியுற்ற சோழர் மீது பெரும் கோபத்துடன் படையெடுத்து வந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன், மொத்த சோழ தேசத்தையும், அதன் வளத்தையும் அழித்துவிட்டு, உறையூரில் இருந்த இந்த ஒரு மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவிட்டுப் போகிறான்.
காரணம், அது ஒரு புலவனுக்கானது. தமிழ் மொழியில் பாடல் யாத்த புலவன். ஆக, தமிழுக்கானது. அதில் கை வைக்க தனக்கு மட்டுமல்ல. அந்த விண்ணாளும் கடவுளுக்கும் உரிமை இல்லை எனப் போற்றி வணங்கிவிட்டு, பின்வரும் தலைமுறையினரும் அதனை தெரிந்துகொண்டு போற்ற வேண்டும் என்று கல்வெட்டாய் இங்கே பொறித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.
வரலாற்றில் நான் நினைக்கும்போதெல்லாம் எண்ணிப் பெருமிதம் கொள்ளும் சம்பவமாக இதையே சொல்வேன்.
[இன்னும்]
*