சொல்லன்றி எதுவுமற்றவன்! – 306
‘எந்தக் கீழ்மைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்’ என்றீர்கள். இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
ஆமாம். இன்றைக்கு இருக்கக்கூடிய எல்லா பதிப்பகங்களையும் நான் அவ்வாறு செல்லவில்லை. சிலவற்றைதான் அதிலும், நேரடி அனுபவம் இருப்பதால்தான் சொல்கிறேன். பணத்துக்காக எந்தக் கீழ்மைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணமாக, சமீபத்தில் ஒரு பதிப்பகம், ஒரே புத்தகத்தை அதன் ஆசிரியர் பெயர் மட்டும் மாற்றிப் போட்டு ஏமாற்றி, அரசு நூலக ஆணை பெற்று பெரும் பொருளீட்டி அம்பலமானதைச் சொல்லலாம்.
இன்றைக்கு இலக்கியத்தின் பெயரைக் கொண்டு, சொல்லிக் கொள்ளும்படி ஓர் இலக்கிய ஆக்கத்தைக்கூட படைக்காமல் ஆனால், இலக்கியத்தின் அனைத்துச் சலுகைகளையும் ஏகபோகமாக அனுபவித்து வரும் ஒருவர் நடத்தும் பதிப்பகம்கூட பத்து ஆண்டுகளுக்குமுன் இதேபோன்று ஒரு புத்தகத்தை, பதிப்பகத்தின் பெயரை மட்டும் மாற்றிப் போட்டு நூலக ஆணை பெற்றிருப்பதை சமீபத்தில் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
அதில் ஒரு புள்ளிகூட மாறவில்லை. பதிப்பக முகவரி மட்டும்தான் மாறி இருந்தது. இப்படிப் பணத்துக்காக எந்தக் கீழ்மையை வேண்டுமானாலும் கூசாமல் செய்வார்கள். ஆனால், அதை எழுதிய எழுத்தாளனுக்குத் தரவேண்டிய ராயல்டி தொகையை மட்டும் தர மாட்டார்கள். தரவும் மனம் வராது. இதையெல்லாம் கேட்கவும், பெற்றுத் தரவும் யார் இருக்கிறார்கள்?
[இன்னும்]
*