சொல்லின்றி எதுவுமற்றவன்! – 078
ஊடகத்தில் பணிபுரிந்தவர் நீங்கள். அப்படி இருந்தும் ஏன் ‘ஐயா’ நூலுக்கு பெரிதாக விமர்சனங்களோ, மதிப்புரைகளோ ஊடகங்களில் வரவில்லை?
(உதடசைத்து லேசாக சிரித்துவிட்டு) சொல்லப்போனால் ஊடகத்தில் பணிபுரிந்தவன் என்னும் ஒற்றை காரணத்தால்தான் வரவில்லை என்று சொல்லலாம். நான் பணிபுரிந்த விகடனையே எடுத்துக்கொள்வோமே. வாரம் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரை எழுதி வெளியிடுபவர்களிடம் என் நூலை அதுவும், புத்தகம் வெளியான இரண்டாவது நாளே எடுத்துப்போய் நேரில் தந்துவிட்டு வந்தேன்.
முதலில், ”கண்டிப்பா மதிப்புரை போட்டுடலாம் வடிவரசு. உடனே போட்டா… நீங்க இங்கே வேலை பார்த்ததால போட்டதா சொல்வாங்க. ஒரு மாதம் ஆகட்டும்” என்றார்கள்.
மூன்று மாதம் கழித்து, ”படிச்சிட்டோம் வடிவரசு. ரொம்ப நல்லாருக்கு. எடுத்து வச்சிருக்கோம். அடுத்த இதழ், இல்லனா… அதற்கடுத்த இதழ்ல போட்டுடுவோம்” என்றார்கள்.
கடைசியாக ஆறு மாதம் கழித்து, ”புத்தகம் வந்து ரொம்பநாள் ஆயிருச்சு. அதான் வேணாம்னு சொல்றாங்க வடிவரசு. கண்டிப்பா அடுத்த புத்தகம் வரும்போது சொல்லுங்க, போட்டுடுவோம்” என்றார்கள். எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன்.
இதில் வேடிக்கை என்னவென்றால்… அவர்கள் அந்த ஆறு மாதத்தில் மதிப்புரை எழுதிய எல்லா நூல்களை விடவும் ‘ஐயா’ நூல் பெரிதும் விற்பனையானதும், பரவலாகப் பேசப்பட்டதும்தான். அப்போதுதான் ஒரு முடிவுவுக்கு வந்தேன். ‘இனிமே எந்த பத்திரிகைக்கும் மதிப்புரை எழுத நம்ம புத்தகத்த எடுத்துட்டுப் போய் நாமளா தரக்கூடாது; அனுப்பக்கூடாது. வேணும்னா… அவங்களா வாங்கி படிச்சிக்கிட்டும்; எழுதிக்கிட்டும்.’
[இன்னும்]
*