ஐபக்கம் – 055 : இரட்டிப்பு மகிழ்ச்சி

#மே16,2024
அம்மா, ஐ, ஏய், ஐயா, ஒள, ஊ, ஆ, உக்கு போன்ற சொற்களையும், எழுத்துகளையும் இதுவரை சொல்லிட்ட ஐ, இன்னும் ‘அப்பா’ சொல்லாதது குறித்து அவ்வப்போது மனத்துக்குள் எண்ணிக் கொள்வதுண்டு. எனினும் அதனை மதியிடமோ, ஐ’யிடமோ காட்டிக் கொண்டதில்லை.
இந்நிலையில் இன்று காலை பதினொரு மணி இருக்கும். ஐ, சற்றும் எதிர்பாராத வகையில் என்னைப் பார்த்து, ‘அப்பா’ என்றிட்டது (அதுவும், இரண்டு தடவை) கேட்டு கடலளவு மகிழ்ந்திட்டேன். ஆம்!
இதில் வேடிக்கை யாதென்றால், முதல் தடவை ஐ அப்பா சொன்னதைக் கேட்ட மதி, கேட்டும் கேட்காதது போல இருந்ததை பார்த்துவிட்டு, ”பாத்தியா… ஐ, அப்பா சொல்லிட்டான்’’ என்றதற்கு, வேண்டுமென்றே அவள், ”அப்படியா சொன்னான்…?’’ என்றதும், உடனே அதற்கு பதில் சொல்லும் விதமாய் அவன் இன்னொரு தடவை ”அப்பா” சொன்னதும்தான். ஆம்!
எல்லா சொற்களையும் ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே சொன்ன ஐ, அப்பாவை மட்டும் ஏனோ, அடுத்தடுத்து இரண்டு தடவை கூறிட்டான்.
அந்தவகையில் ஐ’யின் அப்பாவாக எனக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.
*