ஐபக்கம் – 053 : பேரரசமரம்

#மே13,2024
கடந்து சில நாட்களுக்குமுன் ஐ கவிழ்ந்ததற்காக, இன்று அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சூரத் தேங்காய் உடைக்கப் போயிருந்தோம்.
சென்று தேங்காய் உடைத்துவிட்டு, எங்கள் விருப்ப தேநீரகத்துக்குப் போய் தேநீர் பருகிவிட்டு, அதன் அருகில் இருக்கும் மற்றொரு கோயிலான நீலகண்டர் கோயிலுக்குச் சென்றோம்.
முகப்பருகில் உள்ள பேருரு கொண்ட அரச மரத்தை பார்த்த ஐ, பெருவியப்போடு வைத்த கண் வாங்காமல் அண்ணாந்து வெகுநேரம் பார்த்தது கண்டு, அங்கிருந்த பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.
வீட்டருகில் இருக்கும் சின்னச் சின்ன மரங்களை மட்டுமே இதுநாள் வரை கண்டிட்டவன், இத்தனைப் பெரிய மரத்தை பார்த்தது இதுதான் முதல் தடவை என்பதால் மகிழ்ந்து ரசித்திட்டான். ஆம்!
மதி சொன்னாள். ”மரம்னாலே ஐ’க்கு ரொம்பப் புடிக்குது.’’
நான் சொன்னேன். ”ஆமா… அவன் இந்தக் கணினி உலகத்துல பிறந்த… தாவரவாசியா வருவான்னு தோணுது.’’
இருவரும் ஒருசேர புன்னகைத்துக்கொண்டு ஐ’யை பார்த்தோம்.
அவன் அப்போதும் அந்த அரச மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
*