ஐபக்கம் – 068 : ஐ என்னும் அரசன்

#ஜூன்12,2024
கடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறோம். ஐ’க்கு நாங்கள் எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டிருக்க வேண்டும். அதை அவன் நடுநடுவில் பார்த்தபடி விளையாட வேண்டும். ஆம்!
இதற்கு மாறாக நாங்கள் வேலை செய்யாமல் இருப்பதைப் பார்த்தால், அழுது அடம் பிடிக்கிறான். உடனே எழுந்து ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் போதும், அமைதியாகி விடுகிறான்.
‘இது என்னடா புதுக் கதையா இருக்கே?’ என்று ஆரம்பத்தில் குழம்பினோம். பிறகுதான் ஒருவாறு புரிந்தது.
ஐ தன் பெயருக்கு ஏற்ப தலைவனாக அதாவது, அரசனாக இருந்து நாங்கள் வேலை செய்வதைப் பார்த்து ரசிக்கிறான்; விளையாடுகிறான். ஆம்!
”பொறந்து 168 நாள்தான் ஆகுது. இப்பவே இந்தப் பையன்… என்னென்னலாம் பண்றான், பாருங்க?’’ என்றாள் மதி.
மென்மையாக சிரித்துக்கொண்டு மனத்துள் கூறிக்கொண்டேன். ‘இதுக்கே இப்படின்னா… அவன் இன்னும் வளந்து செய்யப் போறதுக்கெல்லாம்… இவ என்னென்ன சொல்லப்போறாளோ…?’
*