சொல்லன்றி எதுவுமற்றவன்! – 325
என்றாலும், அவ்வளவு பிரயத்தனப்பட்டு மீட்டிட்ட, காத்திட்ட, கட்டிய கலைச் செல்வங்கள் அனைத்தும் இன்றைக்கு அதன் மகத்துவம் உணரப்படாமலேயே அழிகிறதே? (குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில்)
அதற்குக் காரணம் நாம் மட்டும்தான். நாம் என்பது இங்கே நம் அனைவரும் அடங்கிய இந்த சமூகம்தான். கலை மீதான நமது ஆர்வமின்மையும், அக்கறையின்மையும்தான். இதுவே ஓர் ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ, கனடாவிலோ இருந்திருந்தால், உலகமே கண்டு வியக்கும் அளவுக்குப் பாதுகாத்து இருப்பார்கள்; கொண்டாடியிருப்பார்கள்; போற்றியிருப்பார்கள். நாமோ, அது என்னவென்று அறிந்துகொள்ளக் கூட முயற்சிப்பதில்லை.
கலை ரசனை வற்றின சமூகம் நாம் என்பதையே இது காட்டுகிறது. எத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலத்தில், எத்தனையோ கலைச் சாதனைகளை நம் முன்னோர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதையெல்லாம் நாமும், நமக்குப் பின்னால் வருபவர்களும் கண்டு ரசிப்போம்; போற்றுவோம்; பாதுகாப்போம் என்று நம்பிதான் நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால், நாமோ அவர்கள் கனவிலும் நினைத்திடாத பொறுப்பற்ற மடையர்களாக இருக்கிறோம்.
இதற்கெல்லாம் காரணமாக குறிப்பிட்ட ஒருவரை சொல்ல முடியாது. எல்லோரும்தான் காரணம். மிகக் குறைந்தபட்சம் நம் அருகில் இருக்கும் கலைச் செல்வங்களைப் பற்றியாவது நாம் தெரிந்திருக்க வேண்டும். அவற்றின் மகத்துவம் அறிந்து போற்ற வேண்டும். வரும் தலைமுறைக்கு அவற்றைப் பற்றி முடிந்த வழிகளில் எல்லாம் கடத்த வேண்டும். இல்லையென்றால் நாம் இருந்தும் இல்லாதவர்கள் ஆவோம்.
[இன்னும்]
*