சொல்லின்றி எதுவுமற்றவன்! – 127
‘பனஓல காத்தாடி –
பசியாத்த சூரப்பழம்…
செல செய்ய சேத்துமண்ணு –
செட்டுசேரும் கலத்துமேடு…’
கிராமத்து குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையை இத்தனை அழகுற சொல்லும் பாடலைக் கேட்டு பலநாள் ஆகிறதே?
ஆமாம். இதையேதான் என் இசையமைப்பாளரும் சொன்னார். குழந்தைப் பருவத்தை எங்களூரில் அத்தனை மகிழ்வோடு கழித்திருக்கிறேன். அதையே ஒரு பாடலாக்கினால் என்ன? என்று தோன்றியது. உடனே,
‘ஓட ஓட ஓட ஓட ஓட ஓட –
காலும் தேயாதே…
பாட பாட பாட பாட பாட பாட –
சொல்லும் தீராதே…
தேட தேட தேட தேட தேட தேட –
நாளும் போதாதே...
ஆட ஆட ஆட ஆட ஆட ஆட –
நெஞ்சும் ஓயாதே…’
என்று ஆரம்பித்து, என் சிறுவயது வாழ்வை எங்கள் மண்மொழியிலேயே எழுதிவிட்டேன்.
கேட்ட எல்லோருக்கும் மிகப் பிடித்துவிட்டது. அதிலும், என் சிறு வயது நண்பன் ஒருவன் கேட்டு நெகிழ்ந்து போய் அழைத்து, ”என்னடா, அப்படியே நம்மூரையும், நம்ம வாழ்க்கயையும், நாம விளையாடின இடங்களையும் எழுதியிருக்க’’ என்றுவிட்டு, ”ரொம்ப சந்தோசமா இருக்குடா’’ என்றான்.
‘வாழ்வை எழுதுவதுதானே எழுத்தும், இலக்கியமும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 126