சொல்லன்றி எதுவுமற்றவன்! – 317
சங்க இலக்கியப் ப்ரியன் நீங்கள். மொத்த சங்கப் பாடல்களில் இதயத்தைத் தொட்ட ஒரு பாடலாக எதைச் சொல்வீர்கள், ஏன்?
(சிறிதும் யோசிக்காமல்) நற்றிணை 172 ஆவது பாடல். ஒரு புன்னை மரத்தினை தனது தங்கையாக எண்ணி, அதன் அருகில் நின்று தலைவனோடு நகைத்து விளையாடி மகிழ நாணும் பெண்ணைப் பற்றி உரைப்பது.
பாடல் இதுதான் :
‘விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! – நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.’
நம் முன்னோர்கள் எந்தளவுக்கு இயற்கையோடு அதிலும் குறிப்பாக, மரங்களோடு பின்னிப் பிணைந்த அழகிய உன்னத வாழ்வை வாழ்ந்தார்கள் என்பதற்கு இதைவிட சிறந்ததோர் உதாரணம் காட்ட முடியாது.
இப்படிச் சங்க இலக்கியம் முழுக்க எண்ணற்ற பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கின்றன. யாவும் தோண்டத் தோண்ட வெளிப்படுபவை. அவ்வகையில் சங்கப் பாடல்கள் நமக்குக் கிடைத்திட்ட அரும்பெரும் சுரங்கம். அதன் மீது ஆர்வம் பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்; மகிழ்கிறேன்.
[இன்னும்]
*