சொல்லன்றி எதுவுமற்றவன்! – 234
இம்மாதிரி விஷயத்தில் கிராமம் எவ்வளவோ பரவாயில்லை, அல்லவா?
நான் அறிந்தவரையில் ஆமாம்.
எங்கள் கிராமத்தில் சரிபாதியினர் இஸ்லாமியர்கள். அவர்கள் விழாக்களில் நாங்களும், எங்கள் விழாக்களில் அவர்களும் சாதாரணமாக கலந்துகொள்வோம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், எங்கள் தெருவில் இருக்கும் கோயிலில் கூழ் ஊற்றினாலும் சரி, தேர் இழுத்தாலும் சரி, அவர்களின் பங்களிப்பும் அதில் ஏதோ ஒருவகையில் இருக்கும். அதுபோலத்தான் அவர்களது விழாக்களிலும்.
பல இஸ்லாமியர்கள் இந்துக் கடவுளுக்கு பூஜைப் பொருட்கள் வாங்கித் தருவதை நானே பார்த்திருக்கிறேன். வேண்டிக்கொண்டு நிறைவேறினால் அதற்கானக் கொடை வழங்குவதையும் கண்டிருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல… தேர் ஊர்வலம் வரும்போது வத்தி, கற்பூரம், தேங்காய் வாங்கிக் கொடுப்பதையும் பலதடவை பார்த்திருக்கிறேன்.
கடவுள், கோயில் என்பதெல்லாம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. அங்கே விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். அதைத் தடுக்க பதாகை வைப்பது என்பது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய வன்முறை; அயோக்கியத்தனம் என்றே சொல்வேன்.
[இன்னும்]
*