சொல்லின்றி எதுவுமற்றவன்! – 098
சரியாக சொன்னீங்கள். சரி, நீங்கள் முன்னமே சொன்னது போல இத்தொடர் விகடன், குமுதம், குங்குமம் போன்ற பெரும் வாசகர் பரப்பை கொண்ட இதழ்களில் வெளியாகி இருந்தால், வாசிப்பவர்கள் மத்தியில் பரவலான சலனத்தை ஏற்படுத்தி இருக்குமே?
அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால், என்ன செய்வது? நம்மால் முடிந்த முயற்சிதான் எடுக்கமுடியும்; கதவை தட்டித்தான் பார்க்கமுடியும். புது எழுத்துக்கு வாய்ப்பு வழங்கவும், புதிய எழுத்தாளர்களை அடையாளப்படுத்தவும் அங்கே யாரும் தயாராக இல்லாதபோது, நமக்கென இருக்கும் இடத்தில்தானே எழுத முடியும்.
தற்போது பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்தும் ‘கொலுசு’ இதழில், ‘தாவர சங்கமம்’ என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வருகிறேன். என் எழுத்தை கண்டுகொண்ட கவிஞர் பூபாலன் போன்றவர்கள் கூடிப் பேசி, ‘ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்டார்கள். மறுக்காமல் உடனே சம்மதித்து எழுதத் தொடங்கினேன்.
நீங்கள் சொன்ன அதே கதைதான். இந்தத் தொடர் அத்தனை உழைப்பை கோரிவருகிறது. வாசிக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகிறார்கள். நிச்சயம் பெரும் வாசகப் பரப்பிடம் சென்று சேர்ந்திருந்தால் எழுதிய எனக்கும், வாசிப்பவர்களுக்கும் உபயோகமாய் இருந்திருக்கும். என்ன செய்ய?
புது எழுத்தை ஏந்திக் கொண்டாட தயாராக இருப்பவர்களிடம் பெரிய வாசகப் பரப்பு இல்லை. இருப்பவர்களிடம் அதற்கான மனம் இல்லை. இதையெல்லாம் கடந்துதான் இங்கே ஓர் எழுத்தாளர் தன்னையும் தன் எழுத்தையும் நிறுத்தவும்; நிகழ்த்தவும் வேண்டியுள்ளது.
[இன்னும்]
*