சொல்லின்றி எதுவுமற்றவன்! – 057
‘மலர்ந்தும் மலராப் பூக்கள் என்றால் –
அதுவும் பூதான் நெஞ்சே…
இருந்தும் இல்லா உயிர்கள் என்றால் –
அதுவும் உயிர்தான் நெஞ்சே… ’
இது உங்கள் ‘பேரன்புடன்’ பாடலின் துவக்க வரிகள். இப்பாடல் எழுதிய தருணத்தை சொல்லுங்கள்.
வழக்கம்போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உட்கார்ந்து சங்கப் பாடல்கள் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நகர்பேசியல் அழைத்த ஒளிப்பதிவாளர் எஸ்.பி. மணி அண்ணன், ”வடிவு, ஆட்டிசத்தால பாதிக்கப்பட்ட குழந்தைகளப் பத்தி ஒரு பாடல் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. அதுவும் ஒருவாரத்துக்குள்ள. நாளைக்கே நாம சந்திச்சுப் பேசுவோம்’’ என்றார்.
வெளியில் போய் அவரிடம் பேசிவிட்டு வந்து உட்கார்ந்ததும், நீங்கள் குறிப்பிட்ட துவக்க வரிகள் தானாக எனக்குள்ளிருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த வரிகள் என மொத்தப் பாடலையும் சில நிமிடங்களிலேயே எழுதிமுடித்து மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி வைத்தேன்.
படித்துவிட்டு அழைத்தவர், ”பிரமாதமா இருக்கு வடிவு. அப்படியே ஒரு வரிகூட மாத்தாம இசையமைக்க சொல்லலாம்’’ என்றார்.
அடுத்தடுத்த நாட்களில் அவ்வரிகளுக்கு இசையமைத்துப் பாடி, அதற்கேற்ப காட்சிகள் பதிவுசெய்து, படத்தொகுப்பு எல்லாம் முடித்து சரியாக எட்டாவது நாளில் (ஏப்ரல் 2, 2018 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தில்) பாடலை வெளியிட்டோம்.
எனது தனிப்பாடல்களிலேயே கேட்டு அதிகம்பேர் நெகிழ்ந்துபோன; கண்ணீர்விட்ட; பாராட்டிய பாடல் இதுதான். எப்போது நினைத்தாலும் மகிழ்வையும் திருப்தியையும் தரக்கூடியது.
[இன்னும்]
*
சொல்லின்றி எதுவுமற்றவன்! – 056