ஐபக்கம் – 027 : கண்ணூறு

#மார்ச்20,2024
ஐ பிறந்த நாள் முதலே அவன் மீது பலரும் கண் வைக்கத் தொடங்கினார்கள்.
‘பரவால்லயே, பையன் அழாம… சமத்தா இருக்கான்.’
‘பொறந்தன்னிக்கே அம்மா சொல்லிட்டான்… அப்ப, சீக்கிரம் பேசிடுவான்.’
‘என்ன, இந்தப் பையன்… இப்பவே இப்படி ஒருக்களிச்சி தூங்கறான்.’
‘பாரேன், பெரிய ஆளுங்க மாதிரி… காதையும், கண்ணயும் மூடினுகீறத.’
‘அழகா சிரிக்கிறான்… கன்னத்துல குழி விழுது… லட்சணமா வேற இருக்கான்.’
‘குழந்தை பொறந்த வீடு மாதிரியே இல்ல… அமைதியா இருக்கு.’
இப்படி எத்தனை எத்தனையோ வார்த்தைகள்.
எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள், ‘திருஷ்டி சுத்திப் போடுங்க’ என்றார்கள். ஆரம்பத்தில் எப்படி சுத்திப் போடுவது என்று தெரியாமல், நான்கைந்து பேரிடம் கேட்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல, அவற்றில் எதைப் பின்பற்றுவது என்று புரியாமல், ‘சரி, நாமளே புதுசா ஒரு பாட்டு எழுதி… அதப் பாடி… ஒரு தட்டுல கற்பூரம் ஏற்றி சுற்றிவிட்டு, எடுத்துப் போய் வாசப்படி வெளியில போடுவோம்’ என முடிவெடுத்து எழுதினேன்.
இதோ, இதுதான் அந்தக் கண்ணூறு பாடல் :
ஊரு கண்ணு –
உறவு கண்ணு –
நாய் கண்ணு –
நரி கண்ணு –
எல்லா கண்ணும் பட்டுப் போயிடனும்…
பேயி கண்ணு –
பிசாசு கண்ணு –
காத்து கண்ணு –
கருப்பு கண்ணு –
எல்லா கண்ணும் விட்டுப் போயிடனும்…
ஊரு ஒலகுல –
உள்ள சாமி எல்லாமே…
வந்து காத்துடவேணும் –
எங்க தங்கப் பாப்பாவ…
வானு மண்ணுல –
வாழும் தெய்வம் எல்லாமே…
சுத்தி பாத்துக்கவேணும் –
எங்க வைரப் பாப்பாவ…
(ஊரு…)
*