சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004
எழுத்துதான் உங்கள் வாழ்க்கை என்று எப்போது உணர்ந்தீர்கள்?
இது பற்றி மிக விரிவாகவே எனது ‘அகத்திரியில் ஏற்றிய நெருப்பு’ நூலில் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் இங்கே சொல்கிறேன். முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் மாலை, நான் நேசித்த ஒருவர் என்னை வேண்டாம் என்று தூக்கிப் போட்டுவிட்டுப் போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்வை அத்தோடு முடித்துக்கொள்ளத் துணிந்தேன்.
அப்போது என் நலம் விரும்பிகளில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்கள் சரியான நேரத்தில் அங்கே வந்து எனது அம்முடிவை மாற்றி, தன் வார்த்தைகளால் என் மனக் காயங்களுக்கு மருந்திட்டு அனுப்பினார். அந்தத் தருணத்தில்தான் என் கல்லூரியில் இருக்கும் மிகப் பிடித்த ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு என்னை அறியாமல் கண்கலங்கி அழுதபடி பேப்பரும் பேனாவும் எடுத்து எதையோ எழுதினேன். அது அடுத்தடுத்த நாட்களில்தான் பாடல் வரிகள் என்று நண்பர்களால் சுட்டிக்காட்டி இசையமைக்கப்பட்டு, அதே அருள்தந்தையால் உறுதிசெய்யப்பட்டு ஏற்றுக்கொண்டேன். கிட்டத்தட்ட இந்த சம்பவத்துக்குப் பிறகு எழுத்துதான் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டேன்.
[இன்னும்]
*
‘சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு